Friday, November 18, 2011

சாதிப் பெயரில் கொண்டாட்டம் – மன்னிப்புக் கேட்டது பேபால் (Pay Pal) நிறுவனம்!


சென்னை: சாதிப் பெயரில் பணியாளர்கள் கொண்டாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த பேபால் நிறுவனம், அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது. இந்த கொண்டாட்டம் தொடர்பான விளம்பர தட்டிகளையும் அகற்றியது.சென்னை ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ளது அமெரிக்க நிறுவனமான பேபால் அலுவலகம்.


சமீபத்தில் தனது நிறுவன ஊழியர்களுக்காக டும்டும்டும் என்ற பெயரில் ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியை அறிவித்தது. இந்திய பாரம்பரிய திருமணம்தான் இந்த நிகழ்ச்சியின் கரு. அதில் அந்நிறுவனத்தின் பணியாளர்களை ஆறு அணிகளாகப் பிரித்துள்ளனர். அவற்றில் மூன்றின் பெயர் தமிழ் நாட்டின் அய்யர்கள் (Iyers of Tamil Nadu), குஜராத்தின் பட்டேல்கள் (Patels of Gujarat), வங்காளத்தின் பானர்ஜிகள் (Banerjees of Bengal)  என்று இருந்தது. பெரிய விளம்பர தட்டிகளில் இந்தப் பெயர்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அதாவது அந்தந்த மாநில உயர் சாதியின் பெயரால் இந்தக் கொண்டாட்டங்களை நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஏற்கெனவே சாதி வெறி தலைவிரித்தாடும் தமிழகத்தில், இந்த பன்னாட்டு நிறுவனத்தின் இந்த செய்கையை, சேவ் தமிழ் என்ற அமைப்பு வன்மையாகக் கண்டித்ததோடு, உடனடியாக இந்தப் பெயர்களை நீக்க வேண்டும், பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரியது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவன வாயிலில் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் பதாகைகளைத் தாங்கி இந்த அமைப்பினர் இன்று போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து  தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, பகிரங்க மன்னிப்பும் கோரியது பேபால் நிறுவனம்.
அலுவலக விழாவில் சாதிப் பெயரை பயன்படுத்தப் போவதில்லை என்றும், இதற்காக ஊழியர்களிடமும் பொது மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக அதிகாரபூர்வமாக கடிதம் ஒன்றை காவல் துறையினர் முன்னிலையில் சேவ் தமிழ் இயக்கத்தினரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சாதிப் பெயர் தாங்கிய விளம்பர தட்டிகளையும் அகற்றிவிட்டனர்.


நாளை இந்த விழா நடக்கவிருந்த நிலையில், இன்று பேபால் நிறுவனம் மன்னிப்புக் கோரியது, தங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என சேவ் தமிழ் அமைப்பு தெரிவித்துள்ளது.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP