Friday, November 18, 2011

எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதா…’ – ஹஸாரேவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் கண்டனம்!

பாட்னா: தனது அரசு குறித்து குறை கூறிய அன்னா ஹசாரேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பிகார் முதல்வர் நிதிஷ் குமார்.ஊழலை ஒழிக்க பிகார் அரசு கொண்டு வரப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்ட மசோதா சரியில்லை என்று அன்னா ஹசாரே கூறியிருந்தார்.இது குறித்து கருத்துத் தெரிவித்த நிதிஷ் குமார், நான் மக்களுடன் தொடர்பில் இருக்கும் ஒரு முதலமைச்சர். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களுக்கு என்ன வேண்டும் எனக்கு நன்றாகவே தெரியும். என்னை மக்கள் அறிவார்கள். அது சரியில்லை இது சரியில்லை என்று குறை கூறிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை, அவர்களது சான்றிதழும் எனக்குத் தேவையில்லை.

எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பதை முதலில் ஹஸாரே குழுவினர் நிறுத்த வேண்டும். ஒரு அளவோடு நிறுத்துக் கொள்வதுதான் அவர்களுக்கு நல்லது. நான் பதில் சொல்ல வேண்டியது மக்களுக்குத்தான், இவர்களுக்கு இல்லை. அத்துடன் இதையெல்லாம் கேட்க இவர்கள் யார்…,” என்றார்.
இத்தனைக்கும் அன்னா ஹசாரேவுக்கு கடந்த வாரம் வரை ஆதரவு தந்து வந்தவர் நிதிஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹசாரே குழுவினரின் சில செயல்களால் அவர்களை ஆதரித்து வந்த பெரும்பான்மையானோர், இப்போது பின்வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆர்எஸ்எஸ் தொடர்பு  விவகாரம்
இதற்கிடையே, ஹஸாரே – ஆர் எஸ் எஸ் ரகசிய உறவு குறித்த செய்திகள் மதச்சார்பற்ற அவரது அபிமானிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.
ஆர்எஸ்எஸ்சின் முகமூடி தான் அன்னா ஹசாரே என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இதை ஹசாரேவும் பாஜகவும் மறுத்து வருகின்றன. இந் நிலையில் எங்களுக்கும் அன்னா ஹசாரேவுக்கும் மிக நீண்ட காலமாக தொடர்பு உண்டு என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ராவ் பகவத் கூறினார்.

அவர் கூறுகையில், ஊழலுக்கு எதிரான தனது இயக்கத்தில் ஆர்எஸ்எஸ்சும் சேர வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தால் அதை ஏற்போம். அன்னாவின் இயக்கத்தில் சேர ஆர்எஸ்எஸ் தொண்டர்களை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் ஹசாரேவுக்கும் நீண்ட காலமாகவே தொடர்பு உண்டு. மேற்கொண்ட கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில்ஹசாரே எங்களுக்கு உதவினார் என்றார் பகவத்.
ஆனால், இதை அன்னா ஹசாரே மறுத்துள்ளார். எனக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் எந்தத் தொடர்பும் இலலை. என்னை யாரென்று எல்லோருக்கும் தெரியும். நான் ஆர்.எஸ்.எஸ்சின் உதவியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை, என்றார்.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP