மழை பெய்தால் மண்வாசம்
மழை பெய்தால் மண்வாசம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த வாசம் மண்ணுக்கு வந்தது எப்படி என்பது நுண்ணுயிரியாளர்களுக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தெரியுமா என தெரியவில்லை. நான் UG படித்த போது (உண்மையில் அப்போது படித்தேன்; அது தான் இன்னமும் என்னை இன்னமும் பிழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது). நானும் நண்பர் சேரலாதனும் அடிக்கடி நூலகம் செல்பவர்கள். அங்கே ஒரு அற்புதமான நுண்ணுயிரியல் புத்தகம் இருந்தது.
மழை பெய்ததும் வருகிற மண்வாசம் மண்ணின் வாசம் அல்ல. மண்ணில் இருக்கிற ஆக்டினோமைசீட்ஸ் என்கிற ஒருவகை பாக்டீரிய நுண்ணுயிர்கள் வெளியிடும் ஜியோஸ்மின் என்கிற ஒரு வகை வேதிப்பொருள் தான் அந்த வாசத்திற்கு காரணம். மழை பெய்ய ஆரம்பிக்கும் போது அந்த நுண்ணுயிர்கள் தமது உடலின் மேற்பரப்பிலிருக்கிற ஸ்போர் என்னும் ஒருவித இனவிருத்திக்கான உடலிகளை வெளியிடும் வேலையை ஆரம்பிக்கின்றன. அப்பொதுதான் அந்த வேதிப் பொருட்கள் வெளியிடப்படுகின்றன. மின்னல் அல்லது மழை இந்த இரண்டும் அந்த வேலையை தூண்டும் காரணிகளாகின்றன. அந்த வேதிப் பொருட்கள் காற்றில் கற்பூரம் போல கரைபவை. எனவே அந்தப் பகுதி முழுக்க அந்த வாசம் விரவி நிற்கும். இந்த வித நுண்ணுயிரிகளிலிருந்து தான் சுமார் 75 சதவீதம் ஆண்டிபயாடிக் எனப்படுகிற உயிரெதிர்ப்பொருட்கள் பெறப்படுகின்றன. காயம் பட்ட இடத்தில் மண்ணை எடுத்து அப்பிக்கொள்ளும் கிராமத்தவர்களது பழக்கம் இந்த உயிரிகளால் தான் சரியான செயலாகிறது. நன்றி:பிரகாஷ்
0 கருத்துரை:
Post a Comment