மாணவர் பாதியிலேயே விலகினால் கட்டணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும்
டுட்டோரியல் போன்ற பயிற்சி கல்வி மையங்களில் முன்கூட்டி பணம் செலுத்தி படிக்கும் மாணவர்கள் ஏதாவது ஒரு காரணத்தால் பாதியிலேயே விலக நேர்ந்தால் அவர் படித்த காலத்துக்கான கட்டணத்தை கழித்துக் கொண்டு எஞ்சிய தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர் கனிஷ்க் சர்மா தொடர்ந்த வழக்கில் கிழக்கு டெல்லி மாட்ட நுகர்வோர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளது.
பிர்லியன்ட் டுட்டோரியல் என்ற பயிற்சி மையத்தில் படித்து வந்த சர்மா உடல் நலக் குறைவு காரணமாக பாதியிலேயே விலக நேரிட்டது. பயிற்சி மையத்தில் தான் முன்கூட்டியே கட்டிய கட்டணத்தில் எஞ்சிய தொகையை திருப்பித் தர வேண்டும் என்று கோரினார். ஆனால் அந்த பயிற்சி நிறுவனம் கட்டணத் தொகையை திருப்பித் தர மறுத்துவிட்டது. இதையடுத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், கட்டணத்தில் பாதித் தொகையை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். மேலும் அந்த பயிற்சி நிறுவனம் நியாயமறற முறையில் நடந்து கொண்டதற்காக அந்த மாணவனுக்கு ரூ.5000 நஷ்ஈடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களிடம் இருந்து முன்கூட்டியே கட்டணத்தைப் பெற்றுவிட்டு, அந்த நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தாவிடில் கட்டணத்தை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். ஒரு கல்வி நிறுவனத்தின் கற்பிக்கும் சேவை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் பாதியிலே மாணவர்கள் விலகும் சூழலில் அவருக்கு கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்று சொல்வது குற்றமாகும்.
கற்பிக்கும் முறையில் திருப்தி இல்லாமல் அந்த மாணவர் விலகினால் கூட அவருக்கு கட்டணத்தில் எஞ்சிய தொகை திருப்பி அளிக்கப்பட வேண்டும். சேவை அளிக்காமல் கட்டணத்தை பெறுவதற்கு எந்த நிறுவனத்துக்கும் உரிமை இல்லை. எனவே பயிற்சி மையங்களில் சேரும் மாணவர்கள் அந்த பயிற்சி மையத்தில் இருந்து விலகினால் அவருக்கு கட்டணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறுவது தவறாகும் என்று நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி யு.சி திவாரி கூறினார்.
0 கருத்துரை:
Post a Comment