Wednesday, October 26, 2011

மாட்டுத் தொழுவ பள்ளிக்கூடமும் டேப்ளட் பி.சியும்!

‘ஆப்பிள்’ நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக டெக்னாலஜி உலகை பரபரப்பில் ஆழ்த்திய சம்பவமாக அது இருக்கக்கூடும். உலகின் மிக மலிவுவிலை ‘டேப்ளட் பி.சி.’ எனப்படும் கையடக்க கம்ப்யூட்டரை அந்த நேரத்தில்தான் இந்தியா அறிமுகம் செய்தது. ‘டெக்னாலஜி தெரிந்தவர்களுக்குத்தான் கம்ப்யூட்டர் என்ற காலம் மாறவேண்டும்; அது எளிய மனிதனையும் போய்ச் சேரவேண்டும்’ என்று வலியுறுத்திவந்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஒருவேளை இதைப் பற்றி அறிந்திருந்தால் பெருமைப்பட்டிருக்கக்கூடும்!
சுனீத் சிங் டுலி என்கிற கனடாவாழ் இந்தியரின் டேட்டாவிண்ட் நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த டேப்ளட் பி.சியின் பெயர் ‘ஆகாஷ்.’ விலை வெறும் ஆயிரத்து 750 ரூபாய்தான். முதல்கட்டமாக இதை 500 மாணவர்களுக்கு வழங்கி இருக்கும் அரசு, அடுத்ததாக ஒரு லட்சம் டேப்ளட்களை ஆர்டர் செய்திருக்கிறது.

எல்லாம் ஓ.கே! ஆனால், தகவல் தொழில்நுட்பத்தையும் மனிதவள மேம்பாட்டுத் துறையையும் ஒன்றாகச் சேர்த்து கவனிக்கும் மத்திய அமைச்சர் கபில்சிபல் இதைப் பற்றிப் பெருமைப்படுவதுதான் இடிக்கிறது. ‘‘அதிகாரம் இல்லாதவர்களுக்கான ஆயுதம் இது; தொடர்பிழந்தவர்கள் உலகை அறிய உதவும் கருவி இது; ஒதுக்கப்பட்டவர்கள் மைய நீரோட்டத்துக்கு வர உதவும் மகத்தான கண்டுபிடிப்பு இது’’ என்று அறைகூவல் விடுத்திருக்கும் கபில்சிபல், இந்த டேப்ளட் இந்திய மாணவர்களின் எதிர்காலத்தையே மாற்றிவிடும் என்கிறரீதியில் பேசி வருகிறார்.

‘முதுகை ஒடிக்கும் புத்தக மூட்டையை மூலையில் தூக்கியெறிந்துவிட்டு, ஒரு கையில் இந்த டேப்ளட்டை ஸ்டைலாக தூக்கிக்கொண்டு, மறுகையால் கபில்சிபல் மாமாவுக்கு டாட்டா காட்டியபடி’ பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை கபில்சிபல் கனவு காணக்கூடும். ஆனால் நிஜம் என்ன?
தொழில்நுட்பரீதியாக இந்தக் கண்டுபிடிப்பு வரப்பிரசாதம் என்பது உண்மைதான். வீடியோ கான்ஃபரன்சிங் வசதியோடு, மூன்று மணி நேரம் இயங்கக்கூடிய பேட்டரி வசதியோடு, வயர்ஃப்ரீ இணைப்பில் இன்டர்நெட் வசதி பெறக்கூடிய டேப்ளட் இது! மத்திய அரசு நினைத்தால், இந்தியாவில் இருக்கும் எல்லா பள்ளி மாணவர்களுக்கும் இதை இலவசமாகக் கொடுத்துவிடலாம்! ஸ்பெக்ட்ரம் ஊழலில் இழந்ததைவிட பெரிதாக ஏதும் செலவாகிவிடாது!

ஆனால், ‘இந்த ஒற்றை டேப்ளட் எல்லோரது தலையெழுத்தையும் மாற்றிவிடுமா? அந்த அளவுக்கு வசதியோடு நம் கிராமங்களும் பள்ளிகளும் இருக்கின்றனவா?’ என்ற கேள்விகளை மட்டும் கபில்சிபல் தனது மனசாட்சியைப் பார்த்து கேட்டுக்கொண்டால் நல்லது.

மாட்டுத் தொழுவங்களில்கூட இயங்கும் பள்ளிக்கூடங்கள் இன்னமும் இந்தியாவில் இருக்கின்றன. ஆசிரியர்களே இல்லாமல், மழை பெய்தால் ஒதுங்கக் கூரை இல்லாமல், கழிப்பறை வசதி இல்லாமல் பெண் பிஞ்சுகள் வெட்டவெளியில் அவமானமாகத் தலைகுனிந்தபடி ஒதுங்க வேண்டிய அவலத்தில்தான் பெரும்பாலான கிராமத்து பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி அடிப்படைக் கல்வியைப் பெற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு! அந்த அடிப்படைக் கல்வி, இந்த டேப்ளட்டை இயக்கும் அளவுக்கான ஞானத்தை அவர்களுக்குத் தருமா என்பது கேள்விக்குறி!

பல பள்ளிகளில் மின்வசதி இல்லாதபோது, மின்வெட்டு இல்லாத நிலை நகரங்களிலேயே சாத்தியமில்லாதபோது டேப்ளட்டை சார்ஜ் செய்ய மாணவர்கள் எங்கே போவார்கள்? சென்னை போன்ற பெருநகரங்களில்கூட வயர்ஃப்ரீ இன்டர்நெட் வசதி குறிப்பிட்ட சில வளாகங்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்தியாவின் எல்லா கிராமங்களுக்கும் அந்த வசதியை கபில்சிபல் எப்போது தருவார்?

இந்த அற்புதங்கள் எல்லாம்கூட நிகழ்ந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். இன்டர்நெட்டில் இலவசமாக, தரமான கல்வியைத் தருகிற இணையதளங்கள் எங்கே இருக்கின்றன? அவற்றைத் தேடிப் பெற்றெடுக்கும் ஞானத்தை அந்த மாணவர்களுக்கு யார் தருவது? வீடியோ கான்ஃபரன்சிங் வசதியைப் பயன்படுத்தி, எங்கோ தொலைதூரத்தில் ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவதை ஏகலைவனாகக் கேட்டு எந்த மாணவனும் முன்னுக்கு வந்துவிடலாம்தான்! ‘காண்போம் கற்போம்’ போன்ற டி.வி. நிகழ்ச்சிகளைக்கூட மாணவர்களின் கண்ணில் காட்டாத ஆசிரியர்கள், இதை எப்படி சாத்தியமாக்கப் போகிறார்கள்.

உறுதியான வகுப்பறைகளை, திறமையான ஆசிரியர்களை உருவாக்கித் தரவேண்டிய அடிப்படைக் கடமையை மறந்துவிட்டு, தொழில்நுட்பப் புரட்சியைப் பற்றிப் பேசுகிற ஒரு அமைச்சரை மத்திய அரசின் கல்வித்துறை பெற்றிருப்பதை நினைக்கும்போது வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை. கால்களை ஊன்றுவதற்கு தரையே இல்லாமல் திண்டாடும் கிராமத்து மாணவர்களுக்கு, ‘வானத்தைத் தாண்டியும் உங்கள் எல்லை விரிந்திருக்கிறது’ என்று கனவு ஆசை காட்டுகிறார் கபில்சிபல்.

‘மீனை வாங்கிக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது உன்னதம்’

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP