ஆப்கான் வீடுகளைத் தகர்ப்பது போலிஷ் படைக்கு விளையாட்டு
அப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள போலந்து நாட்டு படைகளுக்கு பொழுதுபோகா விட்டால் பொது மக்களின் குடிசைகளை குண்டு வைத்து தகர்ப்பார்கள். ஜெனீவா ஒப்பந்தப் பிரகாரம் போர்க்குற்றமாக கருதப்படக்கூடிய இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட போலிஷ் படையினர் தண்டிக்கப்படுவார்கள் என்று போலந்து இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு இன்னொரு கவலை. வீடு தகர்க்க பாவிக்கப்பட்ட ஷெல் Rosomak துருப்புக்காவி வாகனத்தில் இருந்து ஏவப்பட்டது. ஒரு ஷெல்லின் விலை 150 - 300 யூரோ. ஆப்கான் பொது மக்களின் சொத்து அழிந்ததைப் பற்றி இராணுவத் தலைமையகத்துக்கு கவலை இல்லை. பயிற்சியின் போது, அல்லது விசேட தருணங்களில் பாவிக்க வேண்டிய விலை உயர்ந்த குண்டுகளை இப்படி வீணாக்குகிறார்களே என்று அழுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் போலிஷ் இராணுவம் வீடு தகர்க்கும் வீடியோ ஒன்று போலந்து நாட்டு தினசரிக்கு (Rzeczpospolita) கிடைத்தது. அதைத் தொடர்ந்தே இந்த விபரீத விளையாட்டு பற்றிய விபரங்கள் வெளிவருகின்றன. Rzeczpospolita பத்திரிகைக்கு பேட்டியளித்த இராணுவ வீரர் ஒருவர், தாம் சும்மா விளையாடுக்காக வீடுகளைத் தகர்ப்பதாக தெரிவித்தார்.

0 கருத்துரை:
Post a Comment